Tuesday, September 07, 2004

தீராநதியில் காலபைரவன் கவிதை

குமுதம் தீராநதியில் காலபைரவன் எழுதிய மரணம் பற்றிய இரு கவிதைகள் வெளிவந்துள்ளன. இரண்டாவது கவிதை என்னைக் கவர்ந்தது.

ஒரு நல்ல ஆசிரியரைப் போல
கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல
நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல
நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல
தன் வேலையை
மிக கச்சிதமாகவும்
பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்
செய்து முடிக்கின்ற
மரணத்தை
நாம் ஏன்
தவறாகப் புரிந்துகொள்கிறோம்.
கடைசி வரியின் கேள்வி முக்கியமானது. என்னை யோசிக்கச் செய்தது.

ஆசிரியர் கற்றுத் தருவது, நமக்கு அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்..

வைத்தியர் செய்யும் மருத்துவம், நமக்குப் பரிச்சயமான மருத்துவ நூல்களின் அடிப்படையில்..

விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகள், நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய அறிவியல் கூறுகளின் அடிப்படையில்..

நீதிபதி அளிக்கின்ற தீர்ப்புக் கூட நாமறிந்த சட்டத்தின் மாட்சிமைக்கு உட்பட்டுத்தான்..

மரணம் ஒரு ஆசிரியராக கற்றுத் தரும் பாடமும், வைத்தியராக செய்யும் சிகிச்சையும், விஞ்ஞானியாக நடத்தும் ஆராய்ச்சியும், நீதிபதியாக வழங்கும் தீர்ர்ப்பும் நமக்குக் கொஞ்சமும் புரியாத ஏதோ மர்மத்தின் அடிப்படையில் என்பதால் தான் நாமும் மரணத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் போலும்.

மரத்தடி போட்டியில் எனது படைப்புகள்

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டிக்கென இந்த முறை நான்கு பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்பட்டன.

ஏதோ என்னால் முடிந்த வரைக்கும் மூன்றில் பங்கெடுத்திருக்கிறேன். பார்ப்போம்.

புதுக்கவிதை: மறு ஒலிபரப்பு - ஒரு பிரகடனம்
படைப்பாளி ஒருவன், தன்னைப் பற்றிச் செய்யும் பிரகடனமாக இது.

கட்டுரை: கபீர் சொல்கிறான்...
இது எனக்குப் பிடித்த இந்தி மொழிக் கவிஞன் கபீர் பற்றி எழுதியது.

சிறுகதை: பயணங்கள்
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், எனக்கு நதிப் பைத்தியம் பிடித்திருக்கிறதென்று. அதன் தொடர்ச்சி தான் இது :-)

படித்துப் பார்த்துவிட்டு ஏதேனும் சொல்லுங்கள், எழுதிக் களைத்த விரல்களுக்கு ஒத்தடமாக.