Thursday, April 20, 2006

இன்பங்கள் பலவிதம் - Cognitive Seduction

சுடோகு (Sudoku) போன்ற புதிர்களை எதிர்கொள்வதிலும், சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போதும், மனதினுள் உணரும் இன்பம் அலாதியானது என்பது எனது அனுபவம். அவ்வளவு ஏன், நான் பணிபுரியும் நிறுவனத்தின் "பொட்டி தட்டாளுனர்கள்" மென்பொருள் எழுதுகையில் அதன் சவாலான கட்டங்களை நிறைவேற்றும் போதும் இத்தகைய "உயர் உணர்வினை" (feeling of high) அடைவதாக சொல்லக் கேள்வி. இப்படிப்பட்ட இன்பம் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது.

அனுபவித்து உணரும் இன்பம் (User Experience pleasures) என்பவை சுமாராக பதின்மூன்று வகைப்படுகின்றன. அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் கீழே: (இவை எந்தவொரு வரிசையிலும் இல்லை.)

1. கண்டுபிடிப்பு (Discovery): இதுவரை அறியாத பொருள்/உணர்வு/பயன் அடையும் போது ஏற்படும் அனுபவம்

2. சவால் (Challenge): இலக்குகள் அல்லது தடைகள், தனது தற்போதைய அறிவு மற்றும் திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கும் போது அவற்றை எதிர்கொள்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்

3. கதையாடல் (Narrative): கதாபாத்திரமாகத் தன்னை உருவப்படுத்திப் பிறருக்கு ஒரு கதையைக் கூறும்போது ஏற்படும் அனுபவம்

4. சுய-வெளிப்பாடு (Self-expression): தன்னை உணர்தல் மற்றும் கற்பனை சார்ந்த வெளிப்பாடுகளின் மூலம் பெறும் அனுபவம்

5. சமூகக் கட்டமைப்பு (Social framework): சமூகத்திலே பிறரோடு பழகவும், உறவுகள் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பெறும் அனுபவம்

6. அறிவு சார் எழுச்சி (Cognitive arousal): மூளையின் நரம்புகளைத் தூண்டிவிடும் சிந்தனைப் பாய்ச்சல் மூலம் ஏற்படும் அனுபவம்

7. பரபரப்பு (Thrill): பாதுகாப்பு வலையுடன் (safety net) கூடிய ரிஸ்க் எடுப்பதன் மூலம் பெறும் அனுபவம்

8. புலன் உணர்ச்சி (Sensation): புலன்களைத் தூண்டி அதன் மூலம் கிடைக்கும் அனுபவம்

9. கொண்டாட்டம் (Triumph): வெற்றி சார்ந்த மனநிலையை அடைவதன் மூலம் பெறும் அனுபவம்

10. ஒன்றுதல் (Focus): பரிபூரண ஈடுபாடு கொண்டு தன்னை மறந்து ஒன்றிச் செயல்படுவதன் மூலம் கிடைக்கும் அனுபவம்

11. சாதனை (Accomplishment): குறிப்பிடத்தக்க வகையில் ஏதேனும் வெற்றி அல்லது சாதனை மூலம் பெறும் அனுபவம்

12. கற்பனை (Fantasy): யதார்த்தத்தை மீறிய சம்பவம் அல்லது நிகழ்வினைக் கற்பனை செய்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்

13. படிப்பினை (Learning): வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும் அனுபவம்

பின் குறிப்பு: எனது தற்போதைய நிலையின் காரணமாகவோ என்னவோ, இவை அனைத்தும் திருமணத்துடன் நெருங்கிய தொடர்போடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பெண்ணைத் தேடிக் கண்டுபிடிப்பு, அவளைச் சம்மதம் சொல்ல வைக்கின்ற சவால், நிகழ்ந்ததைப் பிறருக்குச் சொல்லும் கதையாடல், அவளிடம் பேசுகையில் சுய வெளிப்பாடு, திருமணம் மூலம் சமூகக் கட்டமைப்பில் இடம்பெறுதல், எதிர்பார்ப்பு நிறைந்த பரபரப்பு, புலன் உணர்ச்சிகள், திருமணத்தன்று சாதனை நிகழ்த்தியதாய் கொண்டாட்டம், வாழ்வில் அவளுடன் ஒன்றுதல், எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனை, அதெல்லாம் யதார்த்தத்தை மீறியது என்ற இறுதிப் படிப்பினை :-)) - என்ன நான் சொல்வது?

4 Comments:

Blogger வானம்பாடி said...

//என்ன நான் சொல்வது?//

நீங்க சொன்னா சரியாதானுங்ணா இருக்கும்.
ஜமாய்ங்க!

April 20, 2006 7:19 AM  
Blogger Boston Bala said...

படிப்பவர்களுக்கு நல்ல 'படிப்பினை' கொடுக்கும் பதிவினை படிக்க வைக்கிறீர்கள்.

April 20, 2006 8:28 AM  
Anonymous Anonymous said...

effect of reading headrush.typepad.com :).

Kalatta

April 20, 2006 9:22 AM  
Anonymous Anonymous said...

//நான் பணிபுரியும் நிறுவனத்தின் "பொட்டி தட்டாளுனர்கள்" மென்பொருள் எழுதுகையில் அதன் சவாலான கட்டங்களை நிறைவேற்றும் போதும் இத்தகைய "உயர் உணர்வினை" (feeling of high) அடைவதாக சொல்லக் கேள்வி//

உண்மையிலும் உண்மை!!. அந்த பரவசம் உன்னதமானது, அடுத்த சவாலைச் சந்திக்கும்வரை.

April 21, 2006 1:37 AM  

Post a Comment

<< Home