Wednesday, March 02, 2005

நிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்

சென்ற வார இறுதியில் ஹம்பி என்ற வரலாற்றுத் தலத்திற்குச் சென்றிருந்தேன். விஜயநகர தேசம், தன் புகழின் உச்சத்தில் இருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நகரம். காலத்தின் பாய்ச்சலில் மறைந்து போகாமல், இன்னும் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றன, கலைநயத்துடன் சிலை வடிக்கப்பட்டுள்ள ஹம்பியின் கற்கள்.



கற்களாலான பாதைகளில் நடந்து செல்லும்போது ஒரு மன்னருக்கான உணர்வுகள் எனக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. காலத்தைக் கடந்து கற்களின் கதைகளில் தன் பெயரும் நிலைத்திருக்கட்டும் என்பது தான் அந்த மன்னர்களின் நோக்கமா? கலையின் பெருமையை நிறுவும் வகையில் செய்தனரா? அவர்களின் பக்தியின் வெளிப்பாடா? இவைகளில் ஏதேனும் ஒன்றாகவே இருக்கக் கூடும்.



தெய்வங்களுக்கான மண்டபங்கள் நிறைய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பாவம், சிலைகள் இருந்ததற்கான அடையாளங்களைக் கூட இழந்து நிற்கின்றன இவற்றில் பலவும். என் பங்குக்கு, ஒரு மனிதன் அங்கு வந்து சென்றதற்கான அடையாளத்தைப் பதிந்து கொண்டேன்.



இன்றைய பல amphitheatreகளுக்குச் சவால் விடும் வகையில் இருந்தது ஒரு திறந்த வெளி அரங்கம். விருபாக்்ஷா ஆலயத்தின் நேரெதிரே பிரம்மாண்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் மக்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் நீண்ட நெடிய மண்டபப் பாதைகள். அதில் ஏறி நின்றவுடன் எனக்கு நடனமாடுகின்ற ஆசை ஏற்பட்டது என் பிழையா, சூழ்நிலையின் பிழையா?



சரி, வந்தது தான் வந்துவிட்டோம், ஏதேனும் 'பார்த்திபன்'தனமாக ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியதால் கீழ்க்காணும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம்.



இரண்டு வெளிநாட்டுப் பெண்மணிகள் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள். நான் செய்த செயலைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார்கள்:

"Are you from Madras?"

"Yes"

"I knew it. Madras is full of mad people!!"

அடப்பாவிகளா!!