Friday, December 17, 2004

பிக்காஸோவின் ஓவியம் (Pablo Picasso)

பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso, 1881-1973), நவீன ஓவிய உலகின் ஒரு மிகப் பெரிய ஆளுமை.

அவரது ஓவிய வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க காலங்களான Blue Period, Rose Period, Cubism ஆகியவை என்னை மிகக் கவர்ந்தன.

Blue Period-ல் அவரது ஒரு குறிப்பிடத்தகுந்த ஓவியம் - கடற்கரையில் பெண்ணும் குழந்தையும். முழுமையான நீலப் பிண்ணனியில் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பூவின் நிறம் மட்டும் நம்மை என்னவோ செய்யும். இதே காலத்தில் அவரது சுய உருவச் சித்திரம் (self-portrait) ஒன்று.

Rose Period-ல் முந்தைய காலத்தில் எல்லா ஓவியங்களிலும் படரும் ஒரு மெல்லிய சோகம் மறைந்து ஒரு மலர்ச்சியான தோற்றம் வருகிறது. இந்தக் காலத்தின் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் ரொட்டிகளுடன் பெண் மற்றும் சிறுவனும் நாயும். அந்த நாயும் சிறுவனும் ஏதோ ஒரு காட்சியை உற்றுக் கவனிப்பது நமது கற்பனையின் சிறகை விரிக்கிறது.

Cubism என்ற ஓவிய பாணியை Georges Braque என்ற நண்பருடன் சேர்ந்து உருவாக்கினார் பிக்காஸோ. கணித உருவங்களின் (geometircal patterns) துணையுடன் இடத்தை (space) வடிவமைத்துக் காட்டுவது இந்த பாணி. அவ்வப்போது abstract-ஆகப் போய்விடும் இந்தக் காலத்தில் சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் - ஜாடியில் பூக்கள், அமர்ந்திருக்கும் பெண், மாண்டலின் கருவியுடன் பெண் போன்றவை. இந்தக் காலத்தின் சில சுய உருவச் சித்திரங்கள் - 1 2.

வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் பிக்காஸோவின் ஓவியங்களைக் கண்டிப்பாக அணுகிப் பாருங்கள். அவற்றின் அழகும் அடர்த்தியும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.

-o0o-

அவரது சித்திரங்களைப் பார்த்து என்னுள் மலர்ந்த சிந்தனைகள்:

பிக்காஸோவின் ஓவியம்

வானமெங்கும்
வரைந்து விட்டுப் போயிருக்கிறான்,
வண்ணங்களால் தனது
வாழ்க்கையை.

நீலக் கடலின் ஓரக் கரையில் துவங்கி,
இளஞ்சிவப்பாய்
மனித இதயங்களின் ஆழம் வரை
அத்தனையும்
அவனுக்குக் கைவந்த கலை.

உருவங்களின் வெளிப்பரிமாணங்களை,
உணர்வுகளின் உட்பரிமாணங்களை,
பட்டகங்களாக்கிப் படைத்தான்,
சதுரங்களால் அவன்
சதிராட்டம் நடத்தினான்.

சுய உருவச் சித்திரங்கள், அவனின்
சுயம் அறிவிக்கும் கட்டியங்கள்.
இப்படித்தான் நானென்று கூறும்
இணையில்லா அற்புதங்கள்.

மனிதர்களின்
முகங்களையல்ல,
அகங்களை வரைந்தான் அவன்.

பூமியின் ஒரு ஓரத்தில் நின்று
வானம் பார்க்கிறேன் நான்.

பார்த்ததில் பாதி புரிந்தது.

பார்க்காதவை தேடிப்
பயணம் போகிறேன்,
பூமியின் மறு ஓரத்திற்கு.
புரியாதவை தேடியும்
பயணம் போகிறேன்,
மனசுக்குள் மறுபக்கத்திற்கு.