Monday, July 31, 2006

இது எங்க சாமி - 2

எங்கள் கிராமத்தில் இருக்கும் மீனாட்சியம்மன் கோவிலின் திருவிழா பற்றி ஏற்கெனவே சென்ற ஆண்டு எழுதியிருக்கிறேன். இந்த வருடமும் எனது திருமணம் முடிந்த சில நாட்களில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருவிழா விமரிசையாக எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. அது பற்றிய சில குறிப்புகள், நிழற்படங்கள் இங்கே:

சென்ற முறை திருவிழா நடைபெறும் சமயம் கிராமத்திருக்கு பலூன் மற்றும் இதர சிறு விளையாட்டு பொம்மைகள் விற்கும் தம்பதியினர் வந்திருந்தனர். இந்த ஆண்டு அவர்களைக் காணோம். அவர்களுக்கு பதிலாக பஞ்சு மிட்டாய் செய்து விற்கும் ஒருவர் வந்திருந்தார். நான் அவரிடம் சென்று பஞ்சு மிட்டய் செய்வது பற்றி விசாரித்தேன். பிரத்தியேகமாக வைத்திருக்கும் சர்க்கரைக் கலவையில் கொஞ்சம் எடுத்து தனது இயந்திரத்துக்குள் போட்டு மேலே இருக்கும் அரவையின் கைப்பிடி பிடித்து சுழற்றச் சுழற்ற பஞ்சு மிட்டாய் உருவாகிறது. அதை ஒரு குச்சியில் சுற்றிச் சுற்றி எடுத்துக் கொண்டே இருக்கிறார். குறிப்பிட்ட அளவு சேர்ந்தது அதை எடுத்து கஸ்டமரிடம் நீட்டி விடுகிறார். ஒரு ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் விற்கிறார். பஞ்சு மிட்டாய் விற்பவரும் அவரது இயந்திரமும் இங்கே படமாக:



அவரிடம் எனக்கொன்றும், என் தங்கைக்கொன்றும், என் மனைவிக்கொன்றுமாக நான் மூன்று பஞ்சு மிட்டாய்களை வாங்கிக் கொண்டு குஷியோடு செல்லும் காட்சி: [பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை போட்டிருப்பதையும் கவனிக்கவும் :-)]



பஞ்சு மிட்டாய் மட்டும் சுவைத்தால் போதுமா? எனக்கு மிகவும் பிடித்த கிராமப்புற உணவு ஐட்டம் குச்சி ஐஸ் ஆகும். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தினமும் நாலைந்து குச்சி ஐஸ்கள் நான் சாப்பிடுவது எனது வழக்கம். இந்த முறையும் அதில் விதிவிலக்கல்ல. "கிரேப்" சுவையில் குச்சி ஐஸ் ஒன்றை நான் கபளீகரம் செய்யும் காட்சி:



திருவிழா என்றால் தெருவிலே ஊர்ப்பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது முக்கிய நிகழ்ச்சி. இந்த ஆண்டும் சிறப்பான வகையில் அறுபதுக்கும் அதிகமான குடும்பங்கள் அம்மனுக்குப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். ஊர்ப்பெண்கள் பொங்கல் வைக்கும் காட்சி:



எனது அம்மாவும் மனைவியும் இணைந்து வைத்த பொங்கல் final product இதோ: (என் மனைவி அரிசியும் வெல்லமும் அள்ளிப் போட்டு கடைசியில் கொஞ்ச நேரம் கிண்டிவிட்டு தானும் பொங்கல் வைத்ததாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டது பொங்கல் வைத்த வகையில் வருமா என்பது சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாசாரம்!!)



திருவிழா அன்று இரவு "மஞ்சள் தண்ணி - மாவிளக்கு" ஊர்வல நிகழ்ச்சி நடைபெறும். முன்னொரு காலத்தில் பாரதிராஜா திரைப்படத்தில் வருவது போல் எங்கள் ஊரிலும் மஞ்சள் தண்ணியை மாமன் மகன், அத்தை மகள் மேல் ஊற்றுவதெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் அதனால் பல பங்காளிச் சண்டைகள், வெட்டு குத்துகள் அரங்கேறியதால் தற்போது யார் மேலும் மஞ்சள் தண்ணி ஊற்றுவதில்லை என்று ஊர்க்கட்டுப்பாடு வந்து விட்டது. ஊர்வலமாக மஞ்சள் தண்ணியை எடுத்துச் சென்று அதை தெருவில் கீழே கொட்டி விடுவதே தற்போது இருக்கும் நடைமுறை. மஞ்சள் தண்ணீர் சுமந்து வந்தவர்களில் ஒரு பகுதி:



எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் இரண்டாம் நாள் முழுவதும் அம்மன் இறக்கி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதில் ஒரு தீப ஆராதனைக் காட்சி:



சர்வ அலங்காரத்துடன் உற்சவ மீனாட்சி அம்மனின் திருக்காட்சி: