Tuesday, August 24, 2004

ஒரு பாஸிட்டிவ் திங்கிங் கவிதை

இன்று பாஸிட்டிவ் திங்கிங் கவிதை ஒன்று படித்தேன். மிகப் பிடித்திருந்தது. அது இங்கே:

வானில் ஒரு
அழகிய பறவை.

அண்ணாந்து பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தேன்.

கண்களில் எச்சமிட்டு விட்டுப்
பறந்து சென்றது.

எனக்குக் கோபம் வரவில்லை.
துக்கமும் இல்லை.

மாறாக நன்றி சொன்னேன்
கடவுளுக்கு,
"நல்ல வேளை,
மாடுகள் பறப்பதில்லை!"
:-) :-) :-)

Thursday, August 19, 2004

மரம் பற்றி கலீல் கிப்ரான்

மரத்தடி ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக கலீல் கிப்ரானின் மணலும் நுரையும் தொகுப்பிலிருந்து சில நல்ல வரிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதுவரை: 1 | 2 | 3 | 4 | 5

அதில் மரங்கள் பற்றி ஒரு சிந்தனை தட்டுப்படுகிறது நமக்கு:

மரங்கள்,
பூமி வானத்தின் மீது எழுதும்
கவிதைகள்.

நாம் அவற்றை வெட்டி,
காகிதம் தயாரிக்கிறோம்,
நமது வெறுமையைப் பதிவு செய்ய.
அடேயப்பா, என்னமாய் சிந்தித்திருக்கிறார் மனிதர். இத்தனைக்கும் அவரது கவிதைகளும் சிந்தனைகளும் எல்லாம் மிக உயர்ந்தவை. அவற்றைக் கூட மரங்களாகிய கவிதைகளின் முன்னால் வெறுமையானவை என்று எவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடுகிறார். எவ்வளவு நேசித்திருக்க வேண்டும் இயற்கையை.

கவிஞர் வைரமுத்து கூட ஒரு கவிதையில்,

மரம்தான், மரம்தான்,
எல்லாம் மரம்தான்,
மறந்தான் மறந்தான்,
மனிதன் மறந்தான்.
என்று சொல்லும் போது அதை ஒரு சாதாரண சுற்றுச் சூழல் நோக்கோடு சொல்வார். ஆனால் கலீல் கிப்ரான் அதையெல்லாம் கடந்து, ஒரு கலை நோக்கில் கூட, இலக்கியத் தேவைகளுக்காக மரம் வெட்டிக் காகிதம் தயாரிப்பதைக் கூட வெறுமையைப் பதிவு செய்ய முனையும் வீண் காரியம் என்று உதாசீனப்படுத்தி விடுகிறார். அவர் சிந்தனையின் உயர்வினைப் புலப்படுத்தும் உயரிய வரிகள் இவை.

Tuesday, August 17, 2004

மண்ணு மணம்

இந்த வாரம் விகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில என்னோட கல்லூரி சீனியர் 'எனக்குப் பிடித்த கவிதை-2' னு வெ. அனந்த நாராயணன் எழுதின கவிதையைப் போட்டிருக்காரு. உண்மையாவே ரொம்ப நல்லா இருந்துச்சு. கவிதைக்குத் தலைப்பு: "அமெரிக்காவில்..."

அமெரிக்காவில்...

அம்மா இங்கே
அசலான நெல்லூர்
அரிசி கிடைக்கிறது
டாலர் அதிகமில்லை
வடிப்பதும் சுலபம்
மைக்ரோவேவ் அடுப்பில்
வெந்து முடிக்க
ஐந்தே நிமிடங்கள்
கஞ்சி வடிக்கும்
கஷ்டங்கள் இல்லை
கரிப்பிசுக்கு,
கல்நெல்லில்லை
ஆனால் ஏனோ
இந்திய அடுப்பில்
அழுதுகொண்டு தினமும்
அரைக் குழைசலாய்
நீ வடித்த ஐ ஆர் எட்டின்
சுவை கூட இல்லை!
கவிதை பிடிச்சிருக்கிறதில உள்ள சூட்சுமம் என்னன்னு நெனச்சிப் பார்க்கிறேன். மண்ணு மணம் கமழ இருக்கிறது தானோ?

நான் எழுதியதில் எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை என் குலதெய்வக் கோவில் பற்றியது. கற்பனை கலந்து எழுதிய அந்தக் கவிதை, எனக்கும் இன்னும் படித்த பல பேருக்குப் பிடித்திருந்ததற்கும் காரணம் அந்த மண்ணு மணம் என்கிற சங்கதி தானோ? இருக்கும் இருக்கும்.

Friday, August 06, 2004

பென்சிலுக்கு சில அறிவுரைகள்

இன்று ஒரு கதை படித்தேன். மிக எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு ஆழமான ஒரு பொருளைப் புலப்படுத்திக் காட்டியது. [படித்து முடித்த போது எனக்கு ரிச்சர்ட் பாக் (Richard Bach) எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் (Jonathan Livingston Seagull) நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி இன்னொரு நாள்.] ஆங்கிலத்தில் இருப்பதை என்னால் முடிந்த அளவு தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்:

பென்சில் செய்பவர், தான் உருவாக்கிய பென்சிலை எடுத்தார். அட்டைப் பெட்டிக்குள் அதனை வைக்கும் முன்னால் அதனிடம் சொன்னார் - "உன்னை நான் வெளியுலகுக்கு அனுப்பும் முன்னால் நீ அறிந்து கொள்ள வேண்டியவை ஐந்து இருகின்றன. எந்நாளும் அவற்றை மறக்காதே. என்றும் நினைவில் வைத்துக் கொள். அவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே உன்னால் மிகச் சிறந்த பென்சிலாக வர முடியும்.

ஒன்று: உன்னால் பெரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும். உண்மை. ஆனால் அதற்கு, நீ இன்னொருவர் கையில் ஒரு கருவி ஆகவும் தயாராய் இருக்க வேண்டும்.

இரண்டு: அடிக்கடி நீ கூர்தீட்டப்படுவாய். மிக வலிக்கும். ஆனால், நீ ஒரு சிறந்த பென்சில் ஆக அது துணை புரியும். அது மிக அவசியம்.

மூன்று: நீ செய்யும் தவறுகளை உன்னால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கு உனக்கு வாய்ப்பே இல்லை என்று என்றும் எண்ணி விடாதே.

நான்கு: உன்னில் மிக முக்கியமான பாகமாக பிறரால் கருதப்படப் போவது உனக்கு உள்ளே என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பது மட்டுமே. உன் வெளிப்புறத் தோற்றம் அல்ல.

ஐந்து: நீ எந்த எந்த தளங்களில் உபயோகப்படுத்தப் படுகிறாயோ, அந்தத் தளங்கள் அனைத்திலும் உனது தடத்தை விட்டுச் செல்ல வேண்டும். எத்தகைய சூழலாக இருந்தாலும் உனது தடத்தைப் பதிக்க வேண்டும்.

புரிந்ததா? நினைவில் கொள்வாயா?"

பென்சிலுக்குப் புரிந்தது. கடைசி வரையில் இதை மறக்க மாட்டேன் என்று உறுதியளித்து பெட்டிக்குள் சென்றது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. அறிவுரைகள் பென்சிலுக்கா, எனக்கும் உங்களுக்குமா?