Saturday, July 16, 2005

ஹாரி பாட்டரும், அரை-ரத்த இளவரசனும் (Harry Potter and the Half-Blood Prince)

பெங்களூரின் க்ராஸ்வேர்ட் (Crossword) புத்தகக் கடையில் எனது ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு முன் பணம் செலுத்தி வைத்திருந்தேன். சனிக்கிழமை ரிலீஸ். வெள்ளிக்கிழமை காலையில் கடைக்குத் தொலைபேசி, கடையை மறு நாள் எப்போது திறப்பீர்கள் என்று விசாரித்த போது, "ஆறு மணிக்குத் திறந்துடுவோம்" என்று கூறி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர்.



சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து, (அது சரி, சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகிற தியேட்டர் மட்டும் தான் நமக்குக் கோயிலா என்ன? இந்த மாதிரி புத்தகம் ரிலீஸாகிற கடையும் நமக்குக் கோயில் தான்!!) ஆறு மணிக்கெல்லாம் கடை வாசலுக்குப் போய் விட்டேன். குட்டிக்குட்டியாய் பல சுட்டிப் பயல்களும் பெண்களும் தங்கள் பெற்றோருடன் வாசலில் க்யூவில் இருந்தனர். எல்லோர் முகத்திலும் பரபரப்பு. அந்தப் பரபரப்பை அதிகப் படுத்தும் விதமாகக் கடை வாசலில் ஒரு போர்டு. 'இந்திய விநியோகஸ்தர்களின் விருப்பப்படி, நாடெங்கிலும் புத்தக விற்பனை 6:30 மணிக்குத் துவங்கும்'. பல சுட்டிகள் கடை வாசலில் நின்றிருந்த பணியாளர்களிடம் சூடாக இதை எதிர்த்து விவாதம் செய்து கொண்டிருந்தனர். பின்னே? நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விட்டவர்களாம், வேறென்ன செய்வார்கள்?

"இந்தியன் ஸ்டான்டர்ட் டைம்னாலே எப்பவும் லேட் தானா?", "எதுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பசங்களை விட நாங்க மட்டும் லேட்டாப் படிக்க ஆரம்பிக்கணும்?", "பரவாயில்லடா, விடு, அமெரிக்காவில சீக்கிரம் விக்க ஆரம்பிச்சாலும், நம்மள மாதிரி ஸ்பீடாப் படிக்க அவனுங்களுக்கு வராது.. கொஞ்ச நேரம் படிச்சுட்டு, படமா வரட்டும் பார்த்துக்கலாம்னு விட்டிருவானுங்க.. நாம தான் முதல்ல படிச்சு முடிப்போம்." போன்ற வசனங்களைக் காதாரக் கெட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரத்தில், "உள்ளே வந்து நிக்கலாம், ஆனா முதல் புத்தகம் ஆறரை மணிக்குத் தான் விக்க ஆரம்பிப்போம்" என்று கடைப் பணியாளர்கள் சமரசத்திற்கு இறங்கி வந்தனர். அந்த மட்டில் போதுமென்று எல்லோரும் உள்ளே படையெடுத்தோம். அதற்குள், நாளிதழ்களின் புகைப்படக்காரர்கள், சில புத்தகங்களை எடுத்துச் சில சுட்டிகளில் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கிடைத்தது சான்ஸ் என்று புத்தகத்தைப் படிக்கத் துவங்கினார்கள் அந்தச் சுட்டிகள். ஆஜ் தக், என்.டி.டி.வி போன்ற செய்தி நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்புக்குத் தயாராய் வந்திருந்தனர். அவர்களும் சில குழந்தைகளைப் பேட்டிக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக ஆறரை மணிக்கு புத்தக விற்பனை துவங்கியது. முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு குழந்தை உற்சாக மிகுதியில் துள்ளினாளே, அடடா! கண்கொள்ளாக் காட்சி.

நானும் பெங்களூரிலேயே எட்டாவது ஆளாகப் புத்தகத்தை வாங்கிவிட்டுக் கடையிலிருந்து வெளியேறினேன். ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பும் போதே படிக்கத் துவங்கி விட்டேன். முதல்நாள் இரவே வீட்டில் கொறிக்க சில அயிட்டங்கள் வாங்கி வைத்திருந்ததால், காலை உணவுக்கெல்லாம் 'பிரேக்' எடுக்காமல் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த போது மணி பிற்பகல் இரண்டு.

ஐந்தாம் புத்தகத்தை விட பன்மடங்குப் பாய்ச்சல் இந்தப் புத்தகத்தில். தனிப்பட்ட முறையில் நான்காவது புத்தகம் எனது 'ஃபேவரைட்'. அதற்கு அடுத்த இடத்தில் ஆறாவதைச் சொல்லலாம். கணிசமான அளவு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ரௌலிங். கடைசிப் புத்தகத்திற்கான 'நன்மை vs. தீமை' சண்டைக்கு வலுவான அடித்தளம் போடப் பட்டிருக்கிறது.

புத்தகத்தின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்: (குறைந்த அளவு Spoilerகள் உன்டு!!)

** க்ளைமாக்ஸ் மிக சோகமானதாக இருப்பதால் முதல் பாதியில் காமெடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் ரௌலிங். குறிப்பாக இதுவரை கொஞ்சம் முசுடு போல வந்த டம்பிள்டோர் (Dumbledore), இதில் பட்டையைக் கிளப்பி விட்டார்.

** ஹாரி பாட்டருக்கும், ரானுக்கும் புத்தகத்தில் பல முத்தக் காட்சிகள் உண்டு!! ஹாரி பாட்டர், ஒரு வழியாகத் தனக்கு யார் மீது உண்மையான காதல் என்று புரிந்து கொள்கிறான்.

** 'பெயர் சொல்லக் கூடாத அவர்' (He Who Must Not Be Named) பற்றி நிறைய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உண்டு

** நமது பழைய இந்தியப் புராணங்களில் மந்திரவாதிகள், ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு குகையினுள்ளே, ஒரு கிளியின் உடலில் தங்கள் உயிரைப் பத்திரமாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி சமாசாரங்களும் உண்டு.

** டபுள் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஒருவரின் வேஷம் ஒரு வழியாகக் கலைகிறது (என்று கடைசிப் புத்தகம் வரும் வரையில் நம்பிக் கொன்டிருப்போம்!!)