Sunday, July 11, 2004

நான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை

காலை ஏழே முக்கால் மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு வந்து சேர்வேன். (அதிகப் படிப்பும், அதிக சம்பளமும் கொண்டவனுக்கு, அதிக வேலையும் இருப்பது நியாயம் தானே?) பிறகு சமைத்து சாப்பிட்டு முடிக்க இரவு பத்து மணி ஆகி விடும். பிறகு தான் எழுத்தும் வாசிப்பும்.

ஏன் அந்த நேரத்தில் எழுதுகிறாய் என்று கேட்கும் சிலரிடம் 'பின்னிரவு இரண்டு மணீக்கு ZEE English சேனலில் ஒளிபரப்பாகும் FRIENDS ஆங்கில நகைச்சுவைத் தொடரைப் பார்க்க வேண்டும். அது வரை விழித்திருக்க நேரும் நேரத்தை எழுதவும் படிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறேன்' என்று நான் சொல்வதுண்டு. அது பொய்யோ என சில நேரம் சந்தேகிக்கிறேன். 'எனக்கு அத்தனை நேரம் வரை எழுதப் பிடித்திருக்கிறது. அதற்காக இரண்டு மணிக்கு அந்தத் தொடரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை வலிந்து உருவாக்கிக் கொண்டேன்' என்பது உண்மைக்கு சற்று அருகாமையில் இருக்கக்கூடும்.

எழுதுவதற்கு எதுவும் இல்லாமலெல்லாம் கிடையாது. எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங் வலைப்பதிவுக்கு கட்டுரைகள் எழுத வேண்டியதிருக்கும். எனக்குப் பிடித்தமான கலீல் கிப்ரான் கவிதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்ய வேண்டும். எப்போதாவது ஒரு திரைப்பட விமர்சனம். இப்போது இந்த வலைப்பதிவுக்காக எழுதுவதும். பிறகு இருக்கவே இருக்கின்றன என்னுடைய கதை முயற்சிகள். இப்படி நிறைய இருக்கின்றன எழுத.

நிறைய எழுத வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஒரு வேளை இரவின் தனிமையில் தான் எனக்கு எழுதப் பிடிகிக்கிறதோ? ஆனால் அது ஓசைகளற்ற தனிமை என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் தூங்கப் போய்விட்டதால் மனிதப் பேச்சுகளற்ற தனிமை என்று மட்டுமே சொல்லலாம். டி.வி.யிலோ, MP3 பிளேயரிலோ நான் ஒலிக்க விடும் பாடல்களின் மெல்லிய இசை என்னைச் சூழ்ந்திருக்கும்படியான இந்தத் தனிமை, எந்த வகையில் சேர்த்தி என்று புரியவில்லை. அன்றியும், எனது Musings வலைப்பதிவில் நான் இடும் கவிதைகள், சிறுகதைகள் அனைத்துமே (மரத்தடியிலும் இவற்றை இடுகிறேன் நான்) அலுவலக மதிய உணவு இடைவேளையின் போதோ, வெளிசெல்லும் சிறு ஆட்டோ பயணங்களின் போதோ, மேலதிகாரி தன் மீட்டிங் முடித்து வரக் காத்திருக்கும் போதோ, சில சமயம் பெருந்தலைகள் பேசிப் பேசிப் போரடித்துக் கொண்டிருக்கும் மீட்டிங்கின் போதோ கூட எழுதப்படுபவை தான். எனவே இரவில் மட்டுமே என் கற்பனைக் குதிரை ஓடும் என்பதெல்லாம் சரியல்ல.

ஒரு வேளை அன்றாடம் எழுதிப் பழகவில்லையென்றால் நாளை எனக்கு என் எழுத்து மறந்து விடும், அழிந்து விடும் என்ற அச்சம் தான் காரணமோ? என் பள்ளிக் கால நண்பன் ஒருவன். அந்த வயதில் பரதம் அவனிடம் அப்படிக் குடி கொண்டிருந்தது, ஞானசம்பந்தரிடம் தமிழ் குடிகொண்டிருந்ததைப் போன்று. கல்லூரிப் படிப்புக்காக நானும் அவனும் வெவேறு ஊர்களுக்குப் பிரிந்து விட்டாலும், கல்லூரியிலும் அவன் தனது நடனத்தைக் கைவிடவில்லை என்றறிந்தே இருக்கிறேன். இன்றோ, மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிந்து, பரதத்துக்கு நேரமில்லாமல் போய், தனக்கு ஒரு காலத்தில் கைவந்த, கால்வந்த கலை தன்னைக் கொஞ்சங்கொஞ்சமாகக் கைவிட்டுக் கொண்டிருப்பதாக அவன் புலம்புவதைக் கேட்கும் போது என் மனதையும் அறிவையும் பற்றிப் படரும் பதற்றம் தான் என்னை எழுதத் தூண்டுகிறதோ, இரவென்றும் பாராமல்?

விடை காண முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன், இவ்வகைக் கேள்விகளோடு. சங்கச் சித்திரங்கள் தொடரில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதைப் படிக்கும் வரை. அவர் இது பற்றி அழகாகச் சொல்கிறார் இப்படி:
இப்படி எழுதிக் குவிக்க வேண்டுமா என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. 'ஒருவன் தன் எழுத்தியக்கத்தை ஒரு போதும் பிரக்ஞைப்பூர்வமாக கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது' என்று என் ஆசானும், மலையாள எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமாம பி.கெ.பாலகிருஷ்ணன் என் தொடக்க காலத்தில் சொன்னார். எழுத்து எப்போதுமே எழுத்தாளனை மீறிய ஒரு உத்வேகத்தின் விளைவு. அதற்கு தன்னை ஒப்புக் கொடுப்பதே அவன் செய்யக் கூடியது. கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் அவன் இழப்பது பிறகு ஒரு போதும் திரும்பாது. அந்த உத்வேகம் அவனைக் கைவிடும் காலம் ஒன்று வரும். அப்போது ஒரு பக்கம் எழுத ஒரு தேரை நகர்த்துமளவுக்கு அவன் சிரமப்பட வேண்டியிருக்கும்.

சரி தான். எனக்கு இது பயமாகவோ நம்பிக்கையின்மையாகவோ தோன்றவில்லை. இயலாமையின் பாற்பட்ட யதார்த்தமாகவே நான் இதைப் பார்க்கிறேன். இந்த யதார்த்தமே என்னையும் எழுதத்தூண்டுவதாக நான் நம்பிக்கை கொள்கிறேன்.

0 Comments:

Post a Comment

<< Home